
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் உடையணிந்து வந்த மர்ம நபர்கள் கேரள நகை வியாபாரியின் காரை மறித்து 80 லட்சம் பணம் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அடுத்த 15 மணி நேரத்தில் 5 பேரையும் கைது செய்து, பணத்தையும் மீட்டு அதிரடி காட்டியுள்ளனர்.
கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவர் பிரபல நகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் கேரள மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள மற்ற நகை கடைகளுக்கும் மொத்தமாக நகை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு நகையை விற்பனை செய்த பணம் ரூபாய் 76லட்சத்தி 40 ஆயிரத்தை எடுத்து கொண்டு கேரளாவிற்கு சொகுசு காரில் புறப்பட்டார்.
இந்த நிலையில் தக்கலை அருகே காரவிளை தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருக்கும் போது, மற்றொரு சொகுசு காரில் போலீசார் உடையணிந்து வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், அவரது காரை சினிமா பட பாணியில் வழிமறித்து அவர் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதனால் செயவதறியாது திகைத்த நகைக்கடை உரிமையாளர் சம்பத், தக்கலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காரை வழிமறித்து ரூ.76.40 லட்சம் கொள்ளையடிக்க போலீஸ் வேடமணிந்து வந்த 4-மர்ம நபர்களையும் பிடிக்க போலீசார் நான்கு தனி படை அமைத்து விசாரணை நடத்திய நிலையில் கொள்ளையர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர், திருவனந்தபுரத்தை சேர்ந்த டிரைவர் கோபக்குமார், சுரேஷ்குமார், கண்ணன், ராஜேஷ்குமார், மனு என்ற சஜின்குமார் ஆகிய 5-பேரை அதிரடியாக கைது செய்தனர்.
போலீசார் அவர்களிடம் இருந்து 76.40 லட்சத்தை பறிமுதல் செய்ததோடு அவர்கள் பயன்படுத்திய கார் போலீஸ் உடை மற்றும் 10-செல்போன்களை பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த 15-மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன் பாராட்டினார்