மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் சிவன் வடக்கு தெருவை சேர்ந்தவர் மலர்விழி (52). மயிலாடுதுறை ஆர்டிஓ நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார். பொறையார் பார்வதி அம்மன் கோயில்தெருவை சேர்ந்த மனோகரன் என்பவர் தனது காலிமனைக்கு பெயர் மாற்றம் செய்ய தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
அந்த மனு மீது மேல் நடவடிக்கைக்காக மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகத்துக்கு சென்றது. இந்த மனுவை பரிசீலித்து பட்டா பெயர் மாற்றம் செய்து ஆர்டிஓ கொடுத்தார். ஆனால், பட்டாவை வழங்காமல் ரூ.20 ஆயிரம் லஞ்சம் தரும்படி மனோகரிடம் மலர்விழி கேட்டார்.
இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை பொறையாறில் உள்ள மலர்விழி வீட்டுக்கு நேற்று காலை சென்று கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.