தனக்கு பார்க்கப்பட்ட பெண் வீட்டில் திருமணத்துக்கு தீடீரென மறுப்பு தெரிவித்ததால், பொறியியல் பட்டதாரி இளைஞர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம், உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
கரூர் மாவட்டம், வாங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஜானகி. இந்த தம்பதியினரின் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 29). இவர், பொறியியல் பட்டப் படிப்பு முடித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.
இதனிடையே, திருமண வயதை நெருங்கிய தமிழ்ச்செல்வனுக்கு, அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளனர். நிறைய இடத்தில் பெண் பார்த்தும், அவருக்கு பெண் அமையவில்லை.
அதன்பிறகு, ஒரு இடத்தில் பெண் பார்த்து, முடிவாகி திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இரண்டு வீடுகளின் தரப்பில் சேர்ந்து நிச்சயதார்த்தமும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இதில் பெண் வீட்டார் நிச்சயித்த திருமணத்தை திடீரென நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் கடந்த 17 – ம் தேதி தமிழ்ச்செல்வன் மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு, தீக்குளித்தார்.
வெங்கமேடு காவல் நிலையம்
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து, தமிழ்செல்வனை மீட்டு, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், அங்கு 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்தவர், சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார். இது குறித்து, கரூர் வெங்கமேடு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் வீட்டில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால், பொறியியல் பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியான இந்த சம்பவம், அப்பகுதி மக்களை சோகபட வைத்திருக்கிறது. எனினும் போலீஸ் விசாரணையின் முடிவில் தான் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவரும்.