திருப்பூரில், அம்மா உணவகத்தில், தி.மு.க., எம்.எல்.ஏ., வருகைக்காக, பொதுமக்கள், ஒரு மணி நேரம் ‘டிபன்’ கிடைக்காமல், காத்திருந்தனர்.
திருப்பூர் நல்லுாரில் உள்ள, ‘அம்மா’ உணவகத்தில், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வ ராஜ் (தி.மு.க.,), நேற்று காலை ஆய்வு செய்ய வருவார் என்று, அறிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கமாக காலை 7:00 மணிக்கு, டிபன் சாப்பிடுவதற்காக வந்த மக்கள், டோக்கன் வழங்கிய பின் வரிசையில் நிறுத்தப்பட்டனர்; காலை 8:00 மணிக்கு, எம்.எல்.ஏ., வந்தார். அவருக்கு, உணவக ஊழியர்கள் ஆரத்தி எடுத்தனர்; உணவுக்கூடம், விற்பனை கவுன்டரை பார்வையிட்ட பின், பொதுமக்களுக்கு ‘டிபன்’ வினியோகித்தார்.
அங்கிருந்த தோசைக்கல்லில், தோசை வார்த்ததோடு, இட்லியை ருசி பார்த்துவிட்டு, ‘இன்னும் ருசியா இருக்கணும்’ என்று, அறிவுறுத்தினார். உணவகம் முன், எம்.எல்.ஏ., அங்கிருந்து செல்லும் வரை, சமூக இடைவெளி இன்றி கட்சியினர் திரண்டிருந்தனர்.