
தற்போது 4 எம்.எல்.ஏ க்கள் பாஜக.,வில் உள்ளனர் – விரைவில் 150 எம்.எல்.ஏ க்கள் பாஜக சார்பில் பங்கேற்பார்கள் என்றும், தமிழக அளவில் கரூர் மாவட்ட அரசியலில் பாஜக பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தி வளர்ச்சி அடையும் என்றும் கரூரில் பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை பேசினார்.
தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் முன்னாள் மாநில துணை தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான கே.அண்ணாமலை, வரும் 16 ஆம் தேதி சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில்., கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் வழியாகச் செல்லும் பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை, கரூர் பேருந்து நிலையத்தில் பேசினார். அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமத்துக்கும் சென்று பாஜக.,வின் கொள்கைகளையும் சித்தாந்தத்தையும் கொண்டு செல்வேன்; என்னிடம் எந்த அளவும் ஏற்றத்தாழ்வு கிடையாது.
கரூர் மாவட்டம், தமிழக அளவில் மாபெரும் வளர்ச்சி அடையும், அடுத்த 6 மாத காலத்தில் நீங்களே பார்ப்பீர்கள்! அதற்காக நான் நிச்சயம் பாடுபடுவேன்! அனைவரும் சேர்ந்து உழைத்து நம் கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்.
16 ஆம் தேதி நான் உங்களுடைய சேவகனாக பாஜக தலைவராக பொறுப்பேற்க உள்ளேன். பாஜக.,வில் தற்போது 4 எம்.எல்.ஏ க்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளனர்., விரைவில் 150 எம்.எல்.ஏ க்களாக மாறுவார்கள். அந்த அளவிற்கு என்னாலும், உங்களாலும் மாற்ற முடியும். அந்த அளவிற்கு கடின உழைப்பு நம்மிடம் உள்ளது என்றார்.

முன்னதாக கரூர் மாவட்டம், தவிடுப்பாளையம் பகுதியில் கரூர் மாவட்ட பாஜக சார்பில் பாஜக மாநில தலைவர் கே.சிவசாமி தலைமையில், பாஜக நிர்வாகிகளால் வரவேற்பு கொடுக்கப் பட்டது. பின்னர், வேலாயுதம்பாளையம், வெங்கமேடு, கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் அவருக்கு வரவேற்பும் கொடுக்கப்பட்டது.
முன்னதாக கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி கரூர் மாவட்ட பாஜக வர்த்தக அணி சார்பில் நிவாரணமாகக் கொடுக்கப்பட்டது!