கடித்த கண்ணாடி விரியன் பாம்புடன், மருத்துவமனைக்கு வந்த சிறுவனுக்கு அரசு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து, மறுவாழ்வு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகானாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு.இவரது மகன் தர்ஷித்,( 7) அதே பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.
16ம் தேதி அருகில் உள்ள வெள்ளகேட்டு கிராமத்தில் தன் பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுவன், அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் விளையாடி கொண்டு இருந்தான்.
அப்போது, தன்னை ஏதோ கடிப்பது போன்று உணர்ந்த சிறுவன், அதை விரட்டி சென்று அடித்துள்ளான். அடித்த பின், அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என தெரிய வந்துள்ளது
பின், பெற்றோர் உதவியுடன் பாம்பை எடுத்து கொண்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்ற சிறுவனை டாக்டர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.
ஆனால், பாம்பு கடித்ததால் ஏற்படும் அறிகுறிகள் எதுவும் சிறுவனின் உடலில் தெரியாததால், இரண்டு நாட்கள் விஷமுறிவுக்கான சிகிச்சை அளித்து, சிறுவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
மறுநாள், சிறுவனின் கால் வீக்கம் அடைந்து, உடல் நலம் மோசமடைய துவங்கியது. இதனால், மீண்டும் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.
அங்கிருந்த டாக்டர்கள், சிறுவனை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், டாக்டர் பூவழகி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், தீவிர சிகிச்சை அளித்து சிறுவனுக்கு மறுவாழ்வு அளித்தனர்.
இது குறித்து, குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் சீனிவாசன் கூறியதாவது: சிகிச்சையின் போது ஒருநாள் சிறுவனிடம், ‘பாம்பை எதற்கு கொண்டு வந்தாய்’ என கேட்டோம்.
அதற்கு, ‘நான் பாம்பை கையில் கொண்டு வந்தால் தானே, என்னை எது கடித்தது என உங்களுக்கு தெரியும்’ என, சிறுவன் பதில் அளித்தது வியப்பை ஏற்படுத்தியது.
‘இளங்கன்று பயம் அறியாது’ என்பதை, இந்த சிறுவனின் செயல் உணர்த்தியுள்ளது. உலகம் முழுதும், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெறுகின்றனர். பாம்பு கடித்த மூன்று மணி நேரத்திற்குள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு வந்தால் உயிரிழப்புகளை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களை மருத்துவமனை இயக்குனர் எழிலரசி பாராட்டினார்.