அக்காவை பழி தீர்க்க 14 வயது தங்கைக்கு கட்டாயத் தாலி கட்டிய இளைஞன்!

Published:

Vignesh
Vignesh

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பரோட்டா மணி என்கிற மணிகண்டன் 2019-ஆம் ஆண்டில் கொலைச் செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வேலூர்பேட்டை அருந்ததிபாளையத்தைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (22) என்ற இளைஞரை அரக்கோணம் நகரப் போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர்.

தந்தை கோபி, தாய் சரளா ஆகியோருடன் விக்னேஷ் தலைமறைவாகிவிட்டார். பெங்களூருவில் அவர்கள் பதுங்கிருந்ததாகக் கூறப்படுகிறது.

வழக்கில் சிக்குவதற்கு முன்பு அருந்ததிபாளையத்திலுள்ள தனது உறவுக்காரப் பெண் ஒருவரை விக்னேஷ் காதலித்து வந்துள்ளார். அதுவும், ஒருதலைக் காதல்.

இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த விக்னேஷின் குடும்பத்தார் சொந்த ஊரான அருந்ததிபாளையத்துக்குக் கடந்த வாரம் ரகசியமாக வந்துள்ளனர்.

போலீஸாரிடம் சிக்காமல் இருக்க வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்தார் விக்னேஷ்.

இந்தநிலையில், விக்னேஷ் காதலித்த இளம்பெண் வீட்டுக்குச் சென்ற அவரின் பெற்றோர், தங்களது மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு பெண் கேட்டுள்ளனர்.

”கொலை வழக்கில் தேடப்படும் உங்கப் பையனுக்கு எங்க பொண்ண தரமாட்டோம். உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தால், இப்படியொரு பையனுக்குப் பொண்ணுத் தருவீங்களா?” என்று பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். இதுகுறித்து, விக்னேஷிடம் அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

தங்களை அசிங்கப்படுத்திவிட்டதாக நினைத்த மூன்றுப் பேரும் இளம்பெண்ணின் குடும்பத்தினரைப் பழிவாங்க திட்டமிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம்… வீட்டில் கன்னிப் பூஜை நடப்பதாகவும், அதில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்றும் இளம்பெண் வீட்டுக்குச் சென்று குடும்பத்துடன் அழைத்துள்ளார் விக்னேஷின் தாயார் சரளா.

உறவினர் தானே என்று அவர்களும் வருவதாகக் கூறியுள்ளனர். அந்தச் சமயம், வீதியில் விளையாடிக் கொண்டிருந்த இளம்பெண்ணின் தங்கையான 14 வயது சிறுமியை கையைப் பிடித்து தன்னுடனேயே வீட்டுக்குக் கூட்டிச்சென்றுள்ளார் சரளா.

அந்த சிறுமி நடப்புக் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புச் செல்கிறார். வீட்டுக்குள் அழைத்துச் சென்றதும், மறைந்திருந்த விக்னேஷ் கையில் வைத்திருந்த தாலிக் கயிற்றை எடுத்து சிறுமியின் கழுத்தில் கட்ட முயன்றார். சுதாரித்துக்கொண்ட சிறுமி அங்கிருந்து தப்ப முயன்றபோது, விக்னேஷின் தந்தை ஓடிச்சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டியுள்ளார். விக்னேஷின் தாய், சிறுமியின் கையைப் பின்பக்கமாக மடக்கிப் பிடித்து மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, விக்னேஷ் சிறுமியின் கழுத்தில் தாலிக் கட்டிவிட்டு, ”இனிமேல், நீதான் என் பொண்டாட்டி. நான்தான் உன் புருஷன். நானொரு கொலைக்காரன்னு உன் அக்கா கட்டிக்க மாட்டேன்னு சொன்னாலாம். உன் அப்பாவும், அம்மாவும் ஓவரா பேசுனாங்களாம். இப்ப என்ன செய்ய முடியும்?” என்று மிரட்டியுள்ளார்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

சிறுமி கத்தி கூச்சலிட அக்கம், பக்கத்தினர் வந்து வீட்டு கதவைத் தட்டியுள்ளனர். எதையோ சாதித்துவிட்ட திமிருடன் விக்னேஷின் குடும்பத்தினர் கதவைத் திறந்து வெளியே வந்துள்ளனர். அங்கு ஓடி வந்த சிறுமியின் பெற்றோர் கடும் வாக்குவாதம் செய்தனர்.

சிறுமியும் தனது கழுத்திலிருந்த தாலிக் கயிற்றை கழற்றி வீதியில் தூக்கி வீசினார். அப்போது, அங்குத் திரண்டிருந்த மக்கள், ”உன்னதான் போலீஸ் தேடிக்கிட்டே இருக்கே? நீ எப்படி வீட்டுக்குள்ள இருக்க?” என்று சத்தம்போட, திகைத்துப்போய் நின்றுள்ளார் விக்னேஷ்.

உடனடியாக, அரக்கோணம் நகரப் போலீஸாருக்குத் தகவல் சென்றது. அவர்கள் விரைந்துவந்து கொலை வழக்கில் விக்னேஷை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கட்டாயத் தாலி கட்டியது தொடர்பாகவும் சிறுமியின் பெற்றோர் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகாரளித்தனர். ‘

போக்சோ’ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், கட்டாயத் தாலி கட்ட உடந்தையாக இருந்த விக்னேஷின் தாய், தந்தையை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

கொலை தொடர்பாக நகரப் போலீஸார் விசாரணை நடத்திவரும் நிலையில், போக்சோ வழக்கு சம்பந்தமாக அனைத்து மகளிர் போலீஸாரும் விக்னேஷை காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img