வானகரம் பகுதியில் பிரபல நிறுவனம் பெயரில் போலி பெயின்ட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன.
அதன்பேரில், கடந்த 25ம் தேதி வானகரம் செட்டியார் அகரம் முதல் தெருவில் உள்ள ஜெயம் ஷாப்பிங் காம்ப்ளக்சில் உள்ள கிருஷ்ணா வன்பொருளம் மற்றும் மின்பொருளகம் மற்றும் பள்ளிக்கூட தெரு, செட்டியார் அகரம் ஆகிய இடங்களில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
பிரபல பெயின்ட் நிறுவனம் பெயரில் 45 டப்பா பெயின்ட்கள், 11 போலியான சுவர் புட்டி பைகள், 250 காலி பப்பாக்கள், பிரபல பெயின்ட் நிறுவனத்தின் வில்லைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், மாதவரம் – செங்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள மாஹாதேவ் இன்ட்ஸ்ட்ரீஸ் மற்றும் அதனை தொடர்ந்து எருக்கஞ்சேரி ராஜிவ்காந்தி நகர் 2வது தெருவில் இயங்கி வந்த போலி பெயின்ட் தயாரிப்பு நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அங்கு, 19 போலி பெயின்ட் டப்பாக்கள், 24 காலி டப்பாக்கள், போலி வில்லைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக, மதுரவாயல் பகுதியை சேர்ந்த சரவணன் (41), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் (26), எருக்கஞ்சேரி ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த குமரேசன் (37), மாதவரம் சாந்தி காலனியில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சகாதேவ் (45) ஆகிய 4 பேரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.