மத்தியபிரதேச மாநிலத்தின் பன்னா மாவட்டம், வைரங்களின் நிலமாக கருதப்படுகிறது. இங்கு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் மண்ணுக்குள் புதையுண்டு கிடப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த மாவட்டத்தில் சிறு சிறு வைர குவாரிகளை உள்ளூர் விவசாயிகளுக்கு மாநில அரசு குத்தகைக்கு கொடுத்திருக்கிறது. அவர்கள் அந்த குவாரிகளில் தோண்டி வைரம் தேடலாம்.
வைரம் எதுவும் கிடைத்தால், மாவட்ட சுரங்கத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் அதை ஏலம் விட்டு, கிடைக்கும் தொகையில் அரசுக்கு உரிய கட்டணம், வரி போக மீதத் தொகையை வைரத்தை அகழ்ந்தெடுத்த நபருக்கு கொடுப்பார்.
இப்படி ஜாருபூர் கிராமத்தில் அரசிடம் குத்தகைக்குப் பெற்ற வைர குவாரியில் அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்தார், பிரகாஷ் மஜும்தார் என்ற விவசாயி.
அவர், 6.47 கேரட் மதிப்புள்ள உயர்தரமான வைரக்கல்லை தோண்டி எடுத்திருக்கிறார். இவர், கடந்த 2 ஆண்டுகளில் ஏற்கனவே 5 முறை இதுபோல வைரம் வைரம் அகழ்ந்து எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயி பிரகாஷ் கண்டுபிடித்துள்ள வைரம் ஏலம் விடப்பட்டு, அந்த தொகை அவருக்கு வழங்கப்படும். அந்தவகையில் பிரகாசுக்கு ரூ.30 லட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவர், தனக்கு கிடைக்கும் தொகையை தன்னுடன் வைர குவாரி பணியில் ஈடுபட்டுள்ள 4 பேருடன் பகிர்ந்துகொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.