திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்துள்ள பொளையாம் பாளையம் பகுதியில் பொன்னுசாமி (65)- சுமதி (55) தம்பதியர் வசித்து வந்தனர். இத்தம்பதிக்கு ஜனனி (23) என்ற மகள் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபி மருத்துவப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜனனி அதேபகுதியைச் சேர்ந்த சம்பத்(41) என்பவரை காதலித்து வந்துள்ளார். ஜனனிக்கு உறவினர் முறை உள்ள சம்பத் அதே பகுதியில் இறைச்சிக்கடை நடத்திவருகிறார்.
ஜனனியின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கொரோனா தொற்று ஊரடங்கால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த ஜனனி செய்வதறியாமல் தவித்து வந்துள்ளார். தற்போது அரசு அறிவித்த தளர்வுகளால் மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது. இதை நல் வாய்ப்பாக நினைத்த ஜனனி கோவையில் சம்பத்தை திருமணம் செய்துள்ளார்.
நீண்ட நேரமாக ஜனனி வீட்டுக்கு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர் அவருக்கு பல முறை போனில் தொடர்பு கொண்டுள்ளனர். எனினும் ஜனனி கால் எடுக்கவில்லை. இந்த நிலையில், தந்தையின் வாட்ஸ்அப்பிற்கு ஜனனி அனுப்பிய புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவையில் தனது காதலனுடன் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்து தாங்கள் திருமணம் செய்து கொண்டதற்கான போட்டோவையும் அனுப்பி வைத்துள்ளார்.
இதனை பார்த்து மனமுடைந்த ஜனனியின் தாய், தந்தை இருவரும் ஒரே மகள் தங்களை நிராகரித்து விட்டு தனியாக முடிவெடுத்து திருமணம் செய்து கொண்டதால் மனம் உடைந்தனர். பின்னர் வாழைப்பழத்தில் விஷ மாத்திரையை வைத்து சாப்பிட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
தொடர்ந்து, இன்று காலை இவர்கள் வீட்டுக்கு வந்த உறவினர் கதவு தாழிடப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து குன்னத்தூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.