இந்தியாவில் இருந்து நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் தற்போது வரை 9 ஆயிரம் முறை நிலவை வலம் வந்துள்ளது.
நிலவின் மேற்பரப்பில் க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற தாதுக்கள் இருப்பதை ரிமோட் சென்சிங் கருவிகள் மூலம் உறுதி செய்ததாக இஸ்ரோ திங்கள் கிழமை அறிவித்துள்ளது.
2019ம் ஆண்டு ஜூலை 22 அன்று விண்ணில் சந்திரயான் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் முகநூல் மற்றும் யூடியூப் மூலமாக நேரலையாக நடைபெற்ற இரண்டு நாள் நிலவு அறிவியல் பயிலரங்கத்தில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் கே. சிவன், சந்திரயான் 2ன் தரவுகள் தேசிய சொத்து மற்றும் அறிவியலை மேம்படுத்துவதற்கு கல்வி சமூகம் இதைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
விண்வெளித்துறையின் செயலாளராகவும் இருக்கும் சிவன், இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் கண்டறியபட்ட அறிவியல் மற்றும் தரவு தயாரிப்பு ஆவணங்களை வெளியிட்டார்.
சந்திரயான் -2 லார்ஜ் ஏரியா சாஃப்ட் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டரின் (CLASS) பேலோட் முடிவுகளை விவாதித்த அமர்வுகளில் ஒன்று, மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கான், கால்சியம், டைட்டானியம், இரும்பு, மற்றும் சோடியம் போன்ற முக்கிய கூறுகளின் இருப்பை ஆராய சந்திரனின் எக்ஸ்-ரே ஃப்ளோரசன்ஸ் (XRF) ஸ்பெக்ட்ராவை அளவிடுகிறது என்று குறிப்பிட்டது. .
அதிலிருந்து அறிவியல் முடிவுகளைப் பற்றி விவாதித்து, CLASS பேலோட்டின் முதன்மை ஆய்வாளர் ஷ்யாமா நரேந்திரநாத், ‘ரிமோட் சென்சார் மூலமாக முதன்முறையாக சந்திரயான் மேற்பரப்பில் க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் ஆகியவை இருப்பதை முதன்முறையாக பார்வையிட்டேன்.
இது மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. இந்த தனிமங்கள் நிலவின் மொத்த எடையில் 1%க்கும் குறைவாக இருக்கும்.
தீவிர சூரிய ஒளி நிகழ்வுகளின் போது இரண்டு கூறுகளும் சில இடங்களில் கண்டறியப்பட்டன.
சந்திர மேற்பரப்பில் உள்ள தனிமங்களின் இருப்பு முந்தைய நிலவுப் பயணங்களின் போது சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள் மூலம் இதுவரை அறியப்பட்டது.
இஸ்ரோவின் அறிக்கையின் படி, சந்திரயான் 2-ல் உள்ள 8 பேலோட்கள், தொலைநிலை உணர்திறன் மற்றும் உள் நுட்பங்கள் மூலம் சந்திரனின் அறிவியல் அவதானிப்புகளை நடத்துகிறது.
பயிலரங்கின் முதல் நாள், ஆர்பிட்டரில் உள்ள பேலோட்களின் சில தனித்துவமான அம்சங்கள், இதுவரையிலான அறிவியல் கண்டுபிடிப்புகள், பேலோட் செயல்பாடுகள், மற்றும் எட்டு பேலோட்களில் நான்கில் இருந்து பெறப்பட்ட அறிவியல் முடிவுகள் பற்றிய விரிவான விவாதங்கள் மற்றும் விளக்கங்கள் நடைபெற்றன.
மீதமுள்ள நான்கு பேலோடுகளின் அறிவியல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை விவாதத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
CLASS பேலோட் சந்திர மேற்பரப்பில் சோடியத்தைக் கண்டறியும் போது தெளிவின்மைகளை அகற்ற முடிந்தது.
2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் படி சந்திரயான் -1 தரவின் அடிப்படையில் சோடியம் கண்டறியப்பட்டாலும் அது நிச்சயமற்ற தன்மைகளை கொண்டிருந்தது.
நிலவின் மேற்பரப்பில் அமைந்திருக்கும் அனைத்து பெரிய தாதுக்களில் இருந்தும் நேரடியாக மூலக்கூறு மிகுதியை க்ளாஸ் பெற்றுள்ளது,
இந்த மூலக்கூறுகள் தான் சந்திரனின் மேற்பரப்பில் 99%-ஐ உருவாக்குகிறது என்று நரேந்திரநாத் கூறினார். கண்டறியப்பட்ட கூறுகளில் ஆக்ஸிஜன், அலுமினியம், சிலிக்கான், கால்சியம், டைட்டானியம் மற்றும் இரும்பு ஆகியவை அடங்கும்.
‘Handbook of Chandrayaan 2 Payloads Data & Science’, ‘Science Results from Chandrayaan-2 Mission’ மற்றும் ‘Chandrayaan-2 Orbiter Payloads and Data Products’ ஆகிய மூன்று முக்கிய தரவுகளை சிவன் வெளியிட்டார்.
ஐந்து பேலோட்களுடன் கூடிய லேண்டர் மற்றும் ரோவர் தரையிறங்கும் போது வெடித்து சிதறியது. ஆனால் ஆர்பிட்டரில் உள்ள 8 பேலோட்கள் சந்திர மேற்பரப்பு மற்றும் வெளிப்புற வளிமண்டலத்தை வரைபடமாக்க பொருத்தப்பட்டது.
தற்போது வெற்றிகரமாக வரைபடங்களை அனுப்பி வருகிறது. அது விண்ணில் ஏவப்பட்ட நாளில் இருந்து அடுத்த 7 ஆண்டுகளுக்கு அது சிறப்பாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து பேசிய சிவன், சந்திரயான் -2 உள் சூரிய மண்டலத்தின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவுவதாகக் கூறினார்,
ஏனெனில் சந்திரன், காற்று இல்லாத விண்வெளி அங்கமாக இருக்கின்ற காரணத்தால் ஆரம்ப ஆண்டுகளில் சூரிய குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அறிந்து கொள்ள உதவும் என்று கூறினார்.
முடிவுகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன . மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சந்திரயான் -2 ஆர்பிட்டர் பேலோட்களின் தரவை அணுகவும் பகுப்பாய்வு செய்யவும் பணிக்கு மதிப்பு சேர்க்கவும் முடியும்.
கல்வி மற்றும் நிறுவனங்களிலிருந்து அறிவியல் ரீதியாக ஊக்கமளிக்கும் நபர்களின் பங்கேற்பு அதிகம் வரவேற்கப்படுகிறது. (இந்த) தரவு தேசிய சொத்து .
மேலும் நாடு முழுவதும் உள்ள முழு அறிவியல் சமூகமும் இந்தத் தரவைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் வேறு யாரும் செய்யாத புதிய அறிவியலைக் கண்டறிய வேண்டும் என்றும் சிவன் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான தரவுகளை இந்த செயற்கைக் கோள் வழங்கி வருகிறது என்று நாட்டின் தலைமை அறிவியல் வாரிய தலைவர் மற்றும் முன்னாள் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரன் குமார் தெரிவித்தார்.
pradan.issdc.gov.in என்ற இணையதளத்தில் சந்திரயானின் பேலோட்கள் மூலம் பெறப்பட்ட தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. வருங்காலத்தில் அதிகப்படியான தரவுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்