இந்தியாவில் வரும் அக்டோபரில் கொரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என எச்சரித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம், பிரதமர் அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
இதுவரை, தடுப்பூசித் திட்டத்தில் குழந்தைகள் சேர்க்கப்படாததால், மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து பல்வேறு வகையில் ஆராய்ந்து வருவதாக நிபுணர் குழுவும் கூறியுள்ளது.
இந்நிலையில், சண்டிகரின் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய செரோ ஆய்வில், 71 சதவீத குழந்தைகளின் மாதிரிகளில் ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு திறன் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர். இயக்குநர் டாக்டர் ஜெகத் ராம் கூறுகையில், “கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். குழந்தைகளுக்கு இன்னமும் தடுப்பூசிகள் போடப்படவில்லை. எனவே, தொற்றால் குழந்தைகளுக்கு பாதிப்பு இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
ஆனால், குழந்தைகளுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது. பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் சார்பில் சண்டிகரில் 2,700 குழந்தைகளிடையே செரோ சர்வே நடத்தப்பட்டது. அவர்களில், 71 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்காது” என்றார்.