பொதுவாக ஒவ்வொரு ஊர்களிலும், வாரத்தில் ஏதாவது ஒரு நாள் காய்கறிகள், பழவகைகள் என்று வாரசந்தை போடுவது வழக்கம்.
எந்த மழையானாலும் வெயில் ஆனாலும் இந்த சந்தைக்கென்று, குவியும் மக்கள் அநேகர் உள்ளனர். அந்த வகையில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் உடன்குடி மெயின் பஜாரில் வாரசந்தை போடுவது வழக்கம்.
சுமார் 10 ஏக்கர் பரப்பளவு இடத்தில நடக்கும் இந்த சந்தையில், 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகள், பழவகைகள், ஆடு, கோழி, ஜவுளி, நவதானியங்கள் என்று பல கடைகளை போடுவது வழக்கம்.
காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும் இந்த சந்தையில், தங்களின் வீடுகளுக்கு மட்டும் இல்லாமல், வியாபாரிகள் தங்களின் கடைகளுக்கு வாங்கி செல்வதும் வழக்கம்.
இந்நிலையில், நேற்று காலை சந்தைக்கு உடன்குடி நகர பகுதியை சேர்ந்த ஒரு பெண், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினார். மேலும், ரூ.10க்கு ஒரு கட்டு கீரையும் வாங்கிக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றார்.
வீட்டுக்கு சென்றவுடன் வீட்டு முற்றத்தில் வைத்து காய்கறிகளை தனித்தனியாக பிரித்து எடுத்து வைத்த அவர், தான் வாங்கி வந்த கீரை கட்டையும் பிரித்துள்ளார்.
அப்போது அவர் எதிர்பாராத விதமாக, கீரைக் கட்டுக்குள் இருந்த விஷப்பாம்பு குட்டி ஒன்று வெளியே வந்துள்ளது. இதனால் திகைத்துப் போன அவர், தனது கையிலிருந்த கீரைக்கட்டை வீட்டு வாசலில் தூக்கி வீசியுள்ளார்.
அப்போது அந்த குட்டி பாம்பு விறுவிறுவென தப்பித்து ஓடியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.