மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகிக்கு ரசிகர் ஒருவர் பணத்தால் அபிஷேகம் செய்த ருசிகர சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது
குஜராத்தில் துளசி விவாஹ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஸ்ரீசமஸ்த் ஹிராவாடி என்ற அமைப்பு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் குஜராத்தின் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகியான ஊர்வசி ராதாதியா பாடிக்கொண்டிருந்தார். அப்போது, பாடகியின் பாடலில் மயங்கிய ரசிகர் ஒருவர் மேடையில் வந்து, பக்கெட்டில் நிரப்பப்பட்ட ரூபாய் நோட்டுகளை பாடகியின் மீது பொழிந்துள்ளார். இதனால், பாடகி அமர்ந்திருந்த மேடை ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது போல் காணப்பட்டது.
ரசிகர் பணமழை பொழிந்த போது பாடகி அதை பொருட்படுத்தாமல், பாடிக்கொண்டிருந்தார். இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகரின் இந்த செயலுக்கு ஊர்வசி ராதாதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.
பாடகியின் மீது பணமழை பொழிந்த ரசிகரின் செயலுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் இவ்வளவு பணத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ரசிகர் ஒருவர் பாடகியிடம், “அவ்வளவு பணத்தை என்ன செய்வீர்கள்’ என்று கேட்டுள்ளார். ஆனால், பலர் பாடகிக்கு வாழ்த்துகளை தெரிவித்து, அவருக்கு ஆதரவாகவும் நின்றனர்.
ஊர்வசி குஜராத்தி இசைத் துறையில் பிரபலமான பாடகி. அவர் துவாரிகா, பாவ் நா ஃபெரா, நகர் நந்த் ஜி நா லால் மற்றும் கசும்பி நோ ரங் போன்ற பாடல்களைப் பாடியுள்ளார்.
அவரை இன்ஸ்டாகிராமில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.’குஜராத்தி நாட்டுப்புற ராணி’ என்று அவரை அழைக்கின்றனர்.