மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா 3-வது அலை தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதல்படி கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே 13-ம் தேதி முதல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருக்கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் கோவிட் தடுப்பூசி சான்றிதழ் நகல் வைத்திருப்பது, கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ், பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் குறுந்தகவல் வைத்திருப்பது, Whats App செயலி மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து வைத்திருப்பது, கைபேசி எண் மூலமாக கோவின் இணையதளத்தில் உறுதி செய்வது போன்ற ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இனிவரும் காலங்களில் சந்தைகள், திரையரங்குகள், பொது இடங்கள், பொழுதுபோக்கு இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், விளையாட்டு, மைதானங்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், சத்திரம், லாட்ஜ்கள், கேளிக்கை விடுதிகள், டாஸ்மாக் பார்கள், ஆம்னி பேருந்துகள், தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகிய பொது இடங்களுக்கு. செல்வதற்கு அனுமதி இல்லை என நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.