சமீபத்தில் வாரணாசிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தன்னை நேரில் சந்திக்க வந்த ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணின் காலில் விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு கடந்த 13-ம் தேதி சென்றிருந்தார்..
மேலும் வாரணாசியில் காசி விஸ்வநாத் வளாக திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அங்கு ஷிகா ரஸ்தோகி என்ற மாற்றுத் திறனாளிப் பெண் வந்திருந்தார்.
அந்தப் பெண்ணைப் பார்த்த பிரதமர், அவரது உடல்நலம் பற்றி கேட்டறிந்தார். அப்போது அந்த பெண், பிரதமரின் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்காக அவரின் காலில் விழுந்தார்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவரை தடுத்த நிறுத்திய மோடி, அந்தப் பெண்ணின் காலில் விழுந்து பாதங்களை தொட்டு வணங்கினார்.
உலகின் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான இந்தியப் பிரதமர், மாற்றுத் திறனாளி ஒருவரின் பாதங்களைத் தொட்ட காட்சி அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
பிரதமரின் இந்த செயலால் நெகிழ்ந்து போன அந்த பெண், பிரதமருக்கு தனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்தார். இதையடுத்து, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அந்த பெண்ணுக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் முன்னிலையில் அந்தப் பெண்ணின் காலில் விழுந்த பிரதமரின் புகைப்படம் சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
அந்த வகையில், பாஜக மகளிரணியின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசனும் ட்விட்டரில் அந்த படத்தைப் பகிர்ந்துள்ளார்.. மேலும் ” இது “அனைத்து பெண்களுக்கும் கிடைத்த மரியாதை. நமது பிரதமர் நரேந்திர மோடியால் நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இதனிடையே ஷிகாவின் சகோதரர் விஷால் ரஸ்தோகி கூறுகையில், ”என் சகோதரியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
வீட்டில் மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்களை பலவீனமானவர்களாக கருத வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்..” என்று தெரிவித்துள்ளார்.