ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ வெளியிட்டு அதன் மூலம், பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் பிடியில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடன் உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாஃபராபாத் பகுதியைச் சேர்ந்த மாலிக் வசீம் என்ற அந்த நபர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
தெருவில் போடப்பட்டுள்ள சோபாவில் அமர்ந்தவாறு அவர் பேசும் அந்த வீடியோவில் சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு வரும் முசாஃபராபாத் நிர்வாகத்தில் இந்தியா தலையிட்டு தனது குடும்பத்தை காக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, “எனது வீட்டிலிருந்து நானும், என் மனைவி, குழந்தைகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளோம். போலீசாரும், நகர நிர்வாகத்தினரும் எங்களின் வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர்.
எங்களை வீட்டில் இருந்து துரத்தியதால் திறந்தவெளியில் நடுங்கும் குளிரில் நாட்களை கழித்து வருகிறோம். போலீசாருக்கு நெருக்கமான செல்வாக்கு படைத்தவர்கள் எங்களை வீட்டில் இருந்து வெளியேற்றிருக்கிறார்கள். எங்களின் நிலத்தையும் அவர்கள் அபகரித்துள்ளனர்.
இந்த நிலம் இஸ்லாமியர் அல்லாத இந்துக்கள், சீக்கியர்களுக்கு சொந்தமானது. இந்த நிலம் இந்தியாவுக்கு சொந்தமானது. என்னைப் போல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல ஆயிரம் பேர் வீடுகளை விட்டு துரத்தப்பட்டு வீதிகளில் வசித்து வருகிறோம்.
பிரதமர் மோடி உடனடியாக இதில் தலையிட்டு பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாகத்தினரின் காட்டுமிராண்டித்தன நடவடிக்கைகளில் இருந்து பிரதமர் மோடி எங்களை காப்பாற்ற வேண்டும்.
என்னுடைய வீட்டை இன்னும் இரண்டு மணி நேரங்களில் மீண்டும் ஒப்படைக்காவிட்டால் நான் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்வேன். நான் செத்துப்போனால் முசாஃபராபாத் நிர்வாகத்தினர் தான் அதற்கு பொறுப்பு” இவ்வாறு அந்த நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.