அஸ்ஸாமில் 3 வயது சிறுமி யானையிடம் பால் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது
நாயிடம் பால் குடிக்கும் பூனைக் குட்டிகள், ஆட்டிடம் பால் குடிக்கும் நாய்க் குட்டிகள், குரங்குக்கு உதவிய நாய் என செய்திகளில் படிக்கிறோம்.
அது போல் மனிதர்களுடன் வீட்டு விலங்குகள் நெருங்கி பழகும் சம்பவங்களும் நடக்கின்றன. நாய், பூனை, கிளி, பசு, குரங்கு உள்ளிட்டவை மனிதர்களுடன் குழந்தைகளை போல விளையாடுவதையும் நாம் கண் கூடாக பார்க்கிறோம்.
அந்த வகையில் ஒரு யானையின் மடியிலிருந்து 3 வயது சிறுமி ஒருவர் பால் குடிக்கிறார்! இந்த சம்பவம் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷிதா போரா (3). இவர் யானையுடன் விளையாடி பால் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. சிறுமியிடம் யானையும் பாசத்தை பொழிந்து வருகிறது.
அந்த யானையை ஹர்ஷிதா பினு என்று அழைக்கிறார். பினுவும் ஹர்ஷிதாவும் பாசத்துடன் விளையாடி மகிழ்கிறார்கள். இந்த வீடியோவில் ஹர்ஷிதா பினு பினு என யானையை அழைத்து விளையாடுகிறார்.
யானையின் கால்களுக்கு அடியில் ஓடி சென்று விளையாடுகிறார். இத்தனைக்கும் அந்த யானை அந்த சிறுமியை தாயுள்ளத்துடன் கவனித்துக் கொள்கிறது.
பினுவும் ஹர்ஷிதாவும் ஒன்றாக நேரத்தை செலவிடும் காட்சி பார்ப்போரை சந்தோஷப்படுத்தியுள்ளது.