பெங்களூரின் பழச்சாறு கடை ஒன்றில், ‘ராணுவத்தினர் எந்த பொருளை வாங்கினாலும், பணம் கொடுக்க தேவையில்லை’ என, கடை முன் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
குடகைச் சேர்ந்த சாய் ஜூஸ் சென்டரின் உரிமையாளர், இந்திய ராணுவ வீரர்களுக்கு இப்படியொரு வாய்ப்பை வழங்கி அவர்கள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கடை உரிமையாளரின் நாட்டுப்பற்றை, பலரும் பாராட்டுகின்றனர். கர்நாடகாவில் கொரோனா பரவிய பின், சிறு வியாபாரிகள் நெருக்கடியில் சிக்கினர். குறிப்பாக பழச்சாறு கடைகள், பெருமளவில் நஷ்டமடைந்தன.
இன்னும் நஷ்டத்திலிருந்து மீளவில்லை. இது போன்ற கடினமான சூழ்நிலையிலும் கூட, பழச்சாறு கடை உரிமையாளர் ஒருவர், நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி, மற்றவருக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.
பெங்களூரு மல்லேஸ்வரம் விளையாட்டு மைதான இடது புறத்தில், ‘சாய் ஜுஸ் சென்டர்’ என்ற கடை உள்ளது. இக்கடையில், ‘ராணுவத்தினர் என்ன வாங்கினாலும், பணம் கொடுக்க தேவையில்லை’ என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
பெயர் சொல்ல விரும்பாத கடை உரிமையாளர் கூறியதாவது: நாம் இங்கு சுகமாக இருக்கிறோம் என்றால், அதற்கு நமது ராணுவத்தினரே காரணம்.
இந்த கடையை திறந்த நாளிலிருந்தே, ராணுவத்தினர் என்ன வாங்கினாலும் இலவசம். அவர்களிடம் பணம் வாங்குவதில்லை.
நம் நாட்டை நாம் மதிக்காவிட்டால், வேறு யார் மதிப்பர். ராணுவத்தினர் மீதான அன்பால் அவர்கள் பொருட்கள் வாங்கினால் பணம் பெறுவதில்லை.
என் பெயர் தேவையில்லை.நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன். இதில் எந்த சிறப்பும் இல்லை. ராணுவத்தினரின் கஷ்டம், தியாகத்தின் முன்னே, நம் கஷ்டம் ஒன்றுமே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.