கொரோனா தொற்றால் ஒரு வருடமாக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு இன்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதாக வனத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இங்கு சீசன் காலங்களில் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து குவிவது வழக்கமாக இருந்து வருகிறது.
கும்பக்கரை அருவியில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை துவங்கியதன் காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடைவிதித்தனர்.
இந்நிலையில் நோய் தொற்று குறைந்த நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதித்து வந்த நிலையில் பெரியகுளம் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த ஒரு ஆண்டாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் தடைதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரியின் உத்தரவின் அடிப்படையில், தேவதானபட்டி வனச்சரக வனத்துறை அதிகாரி டேவிராஜ் இன்று (15.02.2022) முதல் வழக்கம்போல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதித்து கும்பக்கரை அருவி திறக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.