திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த பிரம்மோற்சவ விழாவில், வள்ளி திருக்கல்யாணம் நடந்தது.திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதை தொடர்ந்து உற்சவர் முருகப் பெருமான், கேடயம், பல்லாக்கு, அன்னம், வெள்ளிமயில், யானை, பூதம், சிம்மம், சந்திரபிரபை போன்ற பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் இரவு நேரத்தில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடந்த, 14ம் தேதி இரவு, மரத்தேர் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு உற்சவர் முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் உலா வந்தார்.
நேற்று, அதிகாலை 4:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், வள்ளிக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல், பச்சை மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதில், கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
இன்று, அதிகாலை 5:00 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு கொடி இறக்கத்துடன் நடப்பாண்டு மாசி பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.