தமிழகத்தில்தென்காசி விருதுநகர் உட்பட 12 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் அறிவித்துள்ளதாவது,
கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு உள்ளதால், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலுார் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று மிதமான மழை பெய்யும்.
கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். வரும், 28ம் தேதி முதல் மார்ச் 1 வரை வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் மட்டும், 1 செ.மீ., மழை பெய்துள்ளது. தெற்கு கடலோர பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் இருந்து பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பாபநாசத்தில் 9, அம்பாசமுத்திரத்தில் 7, திருநெல்வேலியில் 3 மி.மீ., மழை பதிவானது.





