தென்காசியில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் திருவுருவ சிலையை வைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
தென்காசிப் பாண்டியர்கள் என்று பெயர் பெற்ற பிற்கால பாண்டிய மன்னர்களின் ஒருவரும் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலை சிறப்பான முறையில் வடிவமைத்தவருமான மாமன்னன் அரிகேசரி பராக்கிரம பாண்டியனும், அவனுக்குப் பின் வந்த குலசேகர பாண்டியனும் தென்காசி நகரின் வரலாற்றில் முக்கியமானவர்கள். குலசேகர பாண்டியன் பெயரில் தென்காசி மேலப்புலியூர் பகுதியில் குலசேகரநாதர் கோயில் அமையப் பெற்றுள்ளது. சோழப் பேரரசில் மாமன்னன் ராஜராஜனும் ராஜேந்திரனும் அமைத்த தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில்களைப் போல் தென்காசி நகருக்கு காசிவிஸ்வநாதர் கோயிலையும் குலசேகரநாதர் கோயிலையும் அமைத்தவர்கள் பராக்கிரம பாண்டியனும் குலசேகர பாண்டியனும்!
தற்போது தென்காசி தனி மாவட்டமாக அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில், தென்காசி ரவுண்டானாவில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் திருவுருவச் சிலையை நிறுவி, தென்காசி நகரின் பழைமைக்குப் பெயர் சேர்க்க வேண்டும் என்று கோரி இந்து முன்னணி அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
தென்காசி மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் நகரத் தலைவர் நாராயணன் நகர துணைத் தலைவர் சொர்ண சேகர் நகர செயலாளர் காளிமுத்து, நகர செயற் குழு உறுப்பினர் மாரி (எ) மது, இந்து முன்னணி சூர்யா மாரி செல்வம் பாலு உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.