வேலுார் பகுதியில் பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்த போலி பெண் எஸ்.ஐ.,யை போலீசார் வேலுாரில் இன்று கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு இந்திராநகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் . இவர் வேலுார் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ் கண்ணனிடம் கடந்த மாதம் 25ம் தேதி புகார் செய்தார். அதில், எஸ்.ஐ ரோகிணி என்பவர் குற்ற வழக்கு வாகனங்களை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக 24 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார். இதனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வேலுார் காந்திசாலையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பெயர் ரோகிணி என்பதும், போலி எஸ்.ஐ.,யான இவர் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
போலீசார் நேற்று இரவு 11:30 மணிக்கு அவரை கைது செய்து, போலி அடையாள அட்டை, போலீஸ் உடைகளை கைப்பற்றினர். காஞ்சிபுரம் மாவட்ட, சுங்குவார் சத்திரத்தை சேர்ந்தவர் ரோகிணி,(32 )போலீஸ் உடையில், போலி போலீஸ் எஸ்.ஐ., அடையாள அட்டை தயாரித்துக் கொண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வேலை செய்வதாக பலரிடம் கூறியுள்ளார்.
போலீஸ் துறையில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை குறைந்த விலைக்கு வாங்கிக் தருவதாக தினேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரிடம் 24 லட்சம் ரூபாய் கடந்தாண்டு வாங்கிக் கொண்டு தலைமறைவானார். மேலும் பலரிடம் போலீசில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுள்ளார். குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஜாமினில் வந்த குற்றவாளிகளை சந்தித்து வழக்கிலிருந்து காப்பாற்றுவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.இவரை வேலூர் மாவட்ட போலீசார் கைதுசெய்தனர். இந்த மோசடிக்கு இவரது கணவர் சந்துரு(35) உடந்தையாக இருந்துள்ளார். சந்துருவை போலீசார் தேடி வருகின்றனர்.





