மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம். இந்த மாதத்தில் நடப்பாண்டின் ஆவணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் சுறுசுறுப்பாக செயல்படும் மாதம்.
பொதுவாக 2வது மற்றும் 4 வது சனிக்கிழமைகள் அரசு விடுமுறை காரணமாக பத்திர பதிவு அலுவலகங்கள் செயல்படாது. ஆனால் ஆவணங்கள் அதிகம் இருப்பதால் மார்ச் மாதம் முழுவதும் விடுமுறையின்றி வாரத்தின் 6 நாட்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ‘மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால், சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணங்கள் பதிவு அதிகமாக இருக்கும்.
அத்துடன், கடன் பெற்று வீடு மற்றும் மனை வாங்குபவர்கள் மார்ச் மாதத்திற்குள் ஆவணப்பதிவை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பார்கள்.
இதனை கருத்தில் கொண்டு, அதிகரித்துள்ள ஆவணப்பதிவுகளுக்கு ஏதுவாக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட தினங்களில் பத்திரப்பதிவு செய்ய தமிழ்நாடு பதிவுச் சட்ட விதி 4-ல் கண்ட ‘சிறப்பு அவசரநிலை’ அடிப்படையில் விடுமுறை கால ஆவணப்பதிவிற்கான கட்டணமான ரூ.200/- மட்டும் கூடுதலாக செலுத்தி பத்திரப்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது