உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை அவர்கள் சமீபத்தில் தெரிவித்த கருத்து ஒன்று வைரலாக பரவி வருகிறது
அதாவது உலகில் பல்வேறு மக்கள் காலையில் சீக்கிரம் எழுந்து யோகா அல்லது தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் சிலர் இரவில் நேரம் கழித்தும் தூங்கி காலையில் தாமதமாக எழும் பழக்கத்தைக் கொண்டு உள்ளனர்.
குறிப்பாக உலகின் முன்னணி நிறுவனங்களின் சிஇஓ-க்கள் காலையில் 4 அல்லது 5 மணிக்கு எழும் வழக்கத்தை கொண்டு இருக்கும் நிலையில் சுந்தர் பிச்சை 6 அல்லது 7 மணிக்கு தான் எழுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சுந்தர் பிச்சை மன அழுத்தத்தைக் குறைக்க ஒரு வித்தியாசமான பழக்கத்தை கொண்டு உள்ளதை தற்போது தெரிவித்துள்ளார்.
அதன்படி சமீபத்தில் சுந்தர் பிச்சை வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கைக்குக் கொடுத்த பேட்டியில் எனக்குத் தியானம் செய்யும் வழக்கம் இல்லை என்றும்,
குறிப்பாக தியானம் செய்வது எனக்கு மிகவும் கடினம் என்பதால் அவ்வப்போது யூடியூப் தளத்தில் உள்ள 10, 20 அல்லது 30 நிமிட NSDR போட்காஸ்ட் வை பயன்படுத்தி ஒய்வு எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
அதாவது NSDR என்பது என்னவென்றால் Non-Sleep Deep Rest ஆகும். இந்த பெயரை ஸ்டான் போர்ட் நரம்பியல் பேராசிரியர் ஆண்ட்ரூ ஹூபர்மேன் என்பவர் உருவாக்கினார்.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இது மிகவும் அமைதியான நிலையை சுயமாகத் தூண்டுவது மற்றும்
நம் கவனத்தை ஏதோவொன்றின் மீது செலுத்துவதற்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
குறிப்பாக NSDR மூலம் மக்கள் ஓய்வெடுக்கவும், எளிதாக தூங்கவும், பதட்டத்தை குறைக்கவும், மன அழுத்தம் குறைக்கவும், வலியை குறைக்கவும் உதவும் என ஹூபர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும் சுந்தர் பிச்சையின் இந்த பேட்டிக்கு பின்பு யூடியூப் மற்றும் கூகுள் தளத்தில் NSDR குறித்த தேடல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த முறை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் என பலர் நம்புகின்றனர்.