அரசு பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பணி நிரவல் இடமாறுதலை, வரும் 14ம் தேதி மேற்கொள்ள, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அனைத்து பள்ளிகளிலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி மாணவர்களின் எண்ணிக்கை நிலவரப்படி, ஆசிரியர்கள் விகிதத்தை முடிவு செய்ய வேண்டும்.
இதன் அடிப்படையில், பாட வாரியாகவும், மாணவர்கள் விகிதத்தின்படியும் கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, தேவைப்படும் பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்ய வேண்டும்.
இதில் உள்ள ஆசிரியர்கள் யாராவது தலைமை ஆசிரியர் பதிவுக்கான கலந்தாய்வில் கலந்து கொண்டு பதவி உயர்வு பெற்றால் அவர்களின் பெயரையும் நீக்க வேண்டும்.
மேலும் கூடுதல் காலிப்பணியிடங்கள் தேவைப்பட்டால் இது தொடர்பான விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் வருகிற மார்ச் 11ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரும் ஜூன் மாதம் ஓய்வுபெறும் நிலையில் உள்ளவர்கள், உபரியான இடத்தில் பணியாற்றினால், அவர்களை பணி மாறுதல் செய்ய வேண்டாம்.
ஜூன் மாதம் ஓய்வு பெற்றதும், அந்த இடத்தை, பள்ளிக் கல்வி கமிஷனர் தொகுப்புக்கு ‘சரண்டர்’ செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.