திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் பிரசித்திபெற்ற விழாவான பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
கொடி மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் சமேத முத்துக்குமாரசுவாமி எழுந்தருள அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றத்தை காண முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வந்து சப்பரத்தில் எழுந்தருளினர்.
பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகள் நடந்தது.
பத்துநாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் திருக்கல்யாணம் மார்ச் 17-ம் தேதி நடைபெறவுள்ளது.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். மேலும் மார்ச் 21-ம் தேதி கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவுபெறவுள்ளது.
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் வருவது சிறப்பு அம்சமாகும்.
கோடைகாலமான பங்குனி, சித்திரை மாதங்களில் பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா பழனி முருகன் கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திர தேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிப்பட பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
அப்போது அங்கு திரளாக இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா… வீரவேல் முருகனுக்கு அரோகரா… என சரண கோஷம் எழுப்பினர்.
திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகருக்கு காப்புக்கட்டு நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள், மயில்வாகனம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமாஸ் கந்தர், சிவன், பெரியநாயகிஅம்மன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு காப்புகட்டு நடைபெற்றது.