காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு வைரம், வைடூரியக் கற்கள் பதித்த ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக் கவசத்தை காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தார்.
மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு ஹைதராபாத்தை சோந்த பக்தர் ஒருவர் ரூ.5 கோடி மதிப்பிலான வைரம், வைடூரியம், மரகதக்கற்கள் பதித்த தங்கக் கவசத்தை காணிக்கையாக வழங்கியிருந்தார்.
கிரீடம் முதல் பாதம் வரை உள்ள இந்த தங்கக் கவசத்தை காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் அதிஷ்டானத்தில் வைத்து சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார்.
இதையடுத்து, தங்கக்கவசம் வெள்ளி சிம்மாசனத்தில் வைக்கப்பட்டு, காமாட்சி அம்மன் மாதிரி வடிவம் போன்று வடிவமைக்கப்பட்டு, ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது.
சங்கரமடத்திலிருந்து மங்கள இசையுடன் புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக காமாட்சி அம்மன் கோயிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் அயோத்தி ராமஜென்மபூமி அறக்கட்டளைப் பொருளாளர் கோவிந்தகிரி, ஹைதராபாத்தை சேர்ந்த தங்கக்கவச உபயதாரர், தொழிலதிபர்கள் மும்பை சங்கர், புணே காலே, கிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளர் முரளி, சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி ஆா்.நந்தகுமார், காஞ்சிபுரம் நகர் வரவேற்புக்குழுத் தலைவர் டி.கணேஷ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மகளிர் பூத்தட்டுகளுடன் ஊா்வலத்தில் வந்தனர்.
தங்கக்கவச ஊா்வலம் கோயிலுக்கு வந்து சேர்ந்ததும், மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, தங்கக் கவசத்தை அம்மனுக்கு சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தார்.