கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வரவேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்தக் கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்ததற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியது.
இதையடுத்து பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து வரவேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டது. பள்ளி, கல்லூரிக்கு கர்நாடக அரசு விதித்துள்ள ஆடை கட்டுப்பாட்டு மற்றும் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது.
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகளான ரேஷ்மா பாரூக், காஜிரா மற்றும் அவரது தாய் உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி கிருஷ்ண தீக்சித் முன்னிலையில் நடந்தது. அப்போது, ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை கர்நாடக ஐகோர்ட்டின் விரிவான அமர்வு விசாரிக்கும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், காஸி ஜெய்புனிஷா முகைதின் (பெண் நீதிபதி) முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதனையடுத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சீருடையில் மட்டுமே வர அறிவுறுத்தி கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரி முஸ்லிம் மாணவிகள் உள்பட பலர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு விசாரித்து இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது. அந்த உத்தரவில்,
‛ஹிஜாப் அணிவது முஸ்லிம் சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல. பள்ளி சீருடை விதிகள் மீறுவது சரியல்ல. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும்’ என உத்தரவிட்டது.
மேலும், ஹிஜாப் தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.





