திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை புளியரை சோதனை சாவடி வழியாக நள்ளிரவு நேரங்களில் ராட்சத லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதால் சாலைகள் சேதமாகிவிட்டதாக பொதுமக்கள் புகாரால் போலீசார் இன்று தீவிர சோதனை நடத்தினர்.
மதுரை திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
விருதுநகர் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் மணல் ஜல்லி உட்பட கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனை கண்டித்து பெரும்பாலான கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனாலும் புளியரை சோதனை சாவடி வழியாக நள்ளிரவு நேரங்களில் ராட்சத லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாவும், இதனால் சாலைகள் சேதமாகிவிட்டதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிக்கு புகார்கள் சென்றதுஇதையடுத்து அவரது உத்தரவின்பேரில் இன்று காலை புளியரை போலீசார் சோதனைச்சாவடியில் திடீர் வாகனசோதனை மேற்கொண்டனர். அப்போது ஏராளமான லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எடையில் கனிமவளங்கள் கடத்தப்படுவது தெரியவந்தது.
இதனால் அந்த வாகனங்களுக்கு டன்னுக்கு ரூ.1000 வீதம் ஒவ்வொரு லாரிக்கும் சுமார் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற ராட்சத லாரிகளை அங்கிருந்த எடை நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் முன்னிலையில் எடை போடப்பட்டது.
பெரும்பாலான லாரிகளில் 13 டன் முதல் 20 டன் வரை கூடுதல் கனிம வளங்கள் இருப்பது தெரியவந்தது. அவைகளுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒருசில லாரி டிரைவர்கள் தங்களது லாரிகளை அப்படியே சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.இந்த வழித்தடத்தில் தமிழக எல்லையில் தினமும் தீவிர சோதனை நடத்த பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.




