பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.7,500 கோடியில் வெளித்துறைமுகம் விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதுஎன, அதன் தலைவர் டி.கே.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கதி சக்தி திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் துவக்கினார். இதன்படி நாட்டில் அனைத்து பொருளாதார மண்டலங்களும் ஒரே தளத்தின் கீழ் இணைக்கப்படவுள்ளது.
இத்திட்டம் குறித்து தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் டி.கே. ராமச்சந்திரன் மேலும் கூறியதாவது,
மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் சரக்கு போக்குவரத்திற்கு அதிக செலவாகிறது. போக்குவரத்து செலவை குறைக்கும் நோக்கில் 16 அமைச்சகங்களை ஒருங்கிணைத்து கதிசக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தை ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றி 2000 ஏக்கரில் பல தொழிற்சாலைகள் கொண்டுவரப்படவுள்ளன.
சரக்கு பெட்டகங்களை கண்காணிக்கும் ஸ்கேனிங் வசதி ரூ.42 கோடியில் அமைக்கப்படுகிறது. துறைமுகத்தில் கப்பல் மிதவை ஆழத்தை 16 மீட்டர் ஆக உயர்த்துவது, 9வது கப்பல் தளத்தை சரக்குப் பெட்டக தளமாக மாற்றுவது போன்ற உள்கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன.துறைமுகம் முழுவதும் பசுமை மின் உற்பத்தியை பயன்படுத்தும் வகையில் 100 மெகாவாட் திறன் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும். கூடுதலாக 4 லட்சத்து 10 ஆயிரம் மில்லியன் சரக்கு பெட்டகங்கள் கையாளும் வகையில் 1முதல் 4 வரையிலான தளங்கள் சரக்கு பெட்டக தளங்களாக மாற்றப்பட உள்ளது.என அவர் கூறியுள்ளார்.





