உடுமலை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா தொட்டம்பட்டி கிராம வி.ஏ.ஓ., அலுவலகம் பொட்டையம்பாளையத்தில் உள்ளது.
இங்கு, வி.ஏ.ஓ.,வாக சூலுார் தாலுகா செஞ்சேரிபுத்துாரைச்சேர்ந்த, வேலுசாமி,37, பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பொள்ளாச்சி ஊஞ்சவேலம்பட்டியைச் சேர்ந்த, ஜெயராமன்,47. தொட்டம்பட்டியில், ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கியுள்ளார்.
அதற்கு பட்டா மாறுதல் செய்ய வி.ஏ.ஓ., அலுவலகம் சென்றுள்ளார்.’பட்டா மாறுதல் செய்ய வேண்டும், என்றால் 6,500 ரூபாய் லஞ்சம் தர வேண்டும்’ என, வி.ஏ.ஓ., வேலுசாமி கூறியுள்ளார்.
லஞ்சம் தர விருப்பம் இல்லாத ஜெயராமன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அவரிடம் கொடுத்து அனுப்பினர்.
நேற்று மதியம், 2:30 மணிக்கு, அலுவலகத்தில், வி.ஏ.ஓ., வேலுசாமி லஞ்சம் வாங்கும்போது, இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். அவரை கைது செய்து, திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.