இன்று மார்ச்21
உலக வன நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு நடைபெற்றது.
ராமேஸ்வரம் தனுஷ்கோடி சாலையில் மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள், டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை, கரையில் வந்து மணலில் குழி தோண்டி, முட்டை போட்டு, மூடி வைத்து செல்லும். ஒரு ஆமை 140 முதல் 170 முட்டைகள் வரை இடும். நாய், பறவைகளிடம் இருந்து முட்டையை பாதுகாக்கும் பணியை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் செய்து வருகின்றனர். சேகரிக்கப்பட்ட முட்டைகள் குஞ்சு பொரிக்க கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட குஞ்ச பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்படும். குஞ்சுகள் வெளிவர 45 முதல் 55 நாட்கள் வரை ஆகும். முட்டையிலிருந்து வெளிவரும் ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் பொரிப்பகத்தில் இருந்து எடுத்து கடற்கரையில் விடுவர்.
இந்த குஞ்சுகள் தானாகவே கடற்கரை வழியாக ஊர்ந்து கடல் நீரில் நீந்தி ஆழ்கடலை நோக்கி சென்று விடும். உலக வன நாளை முன்னிட்டு இன்று மார்ச்.21 ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் ஆமை குஞ்சுகளை கடலில் விடும் இந்த நிகழ்வு நடைபெற்றது. வனத்துறையினர் கடல் ஆமை குஞ்சுகளை மலர்தூவி கடலுக்குள் அனுப்பி வைத்தனர.
இதில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்,இராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் ஜெகதீஸ் பகான் சுதாகர், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிகாரிகள் வனத்துறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியின் இறுதியில் பாலித்தீன் தவிர்ப்பை வலியுறுத்தி பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களுக்கு மஞ்சப்பை வழங்கி அனுப்பினர்.





