தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது என்று கூறி சட்டசபையில் இருந்து அதிமுக இன்றுவெளிநடப்பு செய்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் மேல தெருவை சேர்ந்தவர் பால் வியாபாரி ஹரிஹரன( 27). இவர் 22 வயதான இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி நாடகமாடி உள்ளார்.
ஹரிஹரன் காதலிப்பதாக கூறியதை நம்பி அந்த பெண்ணும் அவருடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை ஹரிஹரன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்ததால், அவர் விரித்த வலையில் அந்த பெண் சிக்கினார்.
மேலும் இந்த வீடியோ காட்சியை ஹரிஹரன் தனது நண்பர்களான ரோசல்பட்டியை சேர்ந்த மாடசாமி (37), விருதுநகர் மொன்னி தெருவை சேர்ந்த ஜுனத்அகமது (27) மற்றும் சில மாணவர்களுக்கு பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த கும்பலில் மாடசாமி தவிர மற்றவர்கள் அனைவரும் அந்த இளம்பெண்ணிடம் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
தங்களது ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று வற்புறுத்தி அந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் மாடசாமியும் அந்த வீடியோ காட்சியை இளம் பெண்ணின் செல்போனுக்கு அனுப்பி தன் ஆசைக்கு இணங்காவிட்டால் இக்காட்சியை உன் தாயாருக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டி பெண்ணின் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பெண் மன நெருக்கடிக்கு ஆளானார். பின்னர் பாண்டியன் நகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து ஹரிஹரன் உள்பட 8 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைதானவர்களில் 5 பேர் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் இன்று சட்டசபையில் எதிரொலித்தது.
விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பேரவையில் முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
அப்போது, இந்த வழக்கை முறையாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்று அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர் கதையாக உள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி தேவை’ என்று பேரவையில் பேசினார்.
பின்னர், விருதுநகர் பாலியல் வன்கொடுமை உள்பட பல்வேறு குற்றசம்பவங்களை மேற்கொள்காட்டி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர் செல்வம் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, திமுக பொறுப்பேற்றத்தில் இருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. ரவுடிகள் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு நடைபெறுகிறது. மாநிலத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அதை திமுக அரசு தடுத்து நிறுத்த தவறிவிட்டது’ என்றார்.
விருதுநகரில் நடந்த பாலியல் சம்பவம் தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இந்த வழக்கில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதுடன், தவறு செய்பவர்களுக்கு பாடமாக அமையும் வகையில் தண்டனை பெற்று தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.





