கடலூரில் சினிமா பாணியில் காதலன் கண்முன் காதலியை கூட்டு பலாத்காரம் செய்த மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் செம்மண்டலம் பகுதியில் நேற்று நள்ளிரவு 21 வயது பெண் ஒருவர் பஸ் நிறுத்தத்தில் தனியாக நின்றார். அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் ரோந்து வந்தனர். தனியாக நின்ற பெண்ணை போலீசார் சென்று பார்த்த போது அவர் அழுது கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதிலா அந்த பெண் போலீசாரிடம் கூறியதாவது,
கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் தனது காதலனுடன் பாழடைந்த வீட்டில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, 3 வாலிபர்கள் திடீரென்று உள்ளே நுழைந்தார்கள். அப்போது எங்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் என்னையும் எனது காதலனையும் ஒன்றாக சேர்த்து வைத்து செல்போனில் படம் பிடித்து வெளியில் காண்பித்து விடுவோம் என மிரட்டினர்.பின்னர் திடீரென்று எனது காதலனை 2 நபர்கள் வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டனர். பின்னர் அவர்களில் ஒருவர் நான் எவ்வளவோ தடுத்தும், கதறி கெஞ்சிய போதும் என்னை வலுக்கட்டாயமாக என் காதலன் முன்பு பாலியல் பலாத்காரம் செய்தான். அதன் பின்னர் மீதமுள்ள 2 பேரும் என்னை பலவந்தம் செய்தனர்.
பின்னர் 3 பேரும், என்னையும் என் காதலனையும் மிரட்டி, இங்கு நடந்த சம்பவம் தொடர்பாக நீங்கள் யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி அனுப்பினர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு பெண்ணை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பெண்ணின் காதலனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த 3 நபர்கள் யார் என காதலனிடம் விசாரித்த போது அவர் யார் என தெரியவில்லை என கூறினார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சந்தேகப்படும் நபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 3 வாலிபர்களை போலீசார் பிடித்து வந்து காதலனிடம் காண்பித்தனர். அப்போது காதலியை கற்பழித்த 3 நபர்கள் இவர்கள்தான் என அடையாளம் காண்பித்தார். மேலும் காதலனிடம் இருந்து பறித்த செல்போன் ஒரு நபரின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இந்த 3 நபர்களின் செல்போன்களை கைப்பற்றிய போலீசார் ஏதேனும் கற்பழிப்பு வீடியோ அல்லது புகைப்படம் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.மேலும் இந்த 3 நபர்கள் ஏதேனும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.




