மணிப்பூர் மாநிலம் இம்பால் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அமைந்திருக்கும் பள்ளியில், தனது சகோதரியை மடியில் வைத்துக் கொண்டு பாடங்களை கவனித்து எழுதிக் கொண்டிருக்கும் சிறுமியின் புகைப்படம் பார்ப்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
ஒரு சிலரால் மட்டுமே இந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு கண்கலங்காமல் இருக்க முடியும் என்று சிலர் கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.
மணிங்சிலு பாமேய், 11 வயதாகும் அந்தச் சிறுமி தனது வகுப்பறையில், சகோதரியை மடியில் கிடத்திக் கொண்டு பாடங்களை கவனித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
விவசாய நிலத்தில் வேலை செய்ய தங்களது பெற்றோர் சென்றுவிட, பிறந்து சில மாதங்களான தனது சகோதரியை பார்த்துக் கொள்ளும் பொறுப்புடன், படிக்க வேண்டும் என்ற உந்துதலும் போட்டி போட இறுதியில் வென்றது இரண்டுமே.
பொறுப்பையும், கல்வி மீதான ஆர்வத்தையும் ஒருசேர கவனிப்பது என்று முடிவெடுத்தார் இந்தச் சிறுமி.
தனது சகோதரியை மடியில் கிடத்திக் கொண்டு, தனது வீட்டருகே இருக்கும் பள்ளியில் பாடம் பயின்று வருகிறார். இவருக்கு இந்த பச்சிளம் குழந்தையுடன் சேர்த்து நான்கு சகோதர சகோதரிகள் உள்ளனர்.
இந்தச் சிறுமி குறித்த தகவல்களை பார்த்த பல தரப்பினரும், சிறுமியின் கிராமத்துக்கு ஓடிச் சென்று தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.
மணிப்பூர் முதல்வர் பைரன் சிங், குழந்தைகளுக்கான சேவைக் குழுவினரை அந்தக் கிராமத்துக்கு அனுப்பி, சிறுமியின் குடும்பத்துக்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூர் அமைச்சர் ஒருவர், இந்தச் சிறுமியின் கல்விச் செலவு முழுமையையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
தற்போதைய மாணவ, மாணவிகளுக்கும், சிறார்களுக்கும் இந்தச் சிறுமி ஒரு சிறந்த உதாரணமாக உள்ளார். ஏழ்மையோ வாய்ப்பு மறுப்போ கல்விக்கு எப்போதும் ஒரு தடையாக இருக்காது என்று பலரும் மணிங்சிலுவை மனதாரப் பாராட்டி வருகிறார்கள்.
ஆன்லைன் கல்வி முறையால் சரியாக படிக்காத மாணவ, மாணவிகள் நிச்சயம் இந்தச் சிறுமியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.