தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் கோயிலில் சித்திரை விஷு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஏப்13ல் திருத்தேரோட்டம்,ஏப்14சித்திரை விஷூ தீர்த்தவாரி நடைபெறும்.
பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி கோயில் சித்திரை விஷுத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்கிழமை காலை கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமி, அம்பாள், கொடிமரம் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து சிவனடியார்களும், பக்தர்களும் வந்து வழிபட்டனர்.
தொடர்ந்து திருவிழா நாட்களில் காலை மற்றும் இரவு ஏகசிம்மாசன, கைலாச பருவதம், அன்னம், பூதம், சிம்மம், ரிஷபம், கேடயம், வெட்டுங்குதிரை, காமதேனு, தந்தப் பூம்பல்லக்கு ஆகிய வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறும். 8ஆம் திருநாளான ஏப். 12 செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீ நடராஜர் கேடயத்தில் வெள்ளை சாத்தி புறப்பாடு, மாலை 4 மணிக்கு பச்சை சாத்தி அலங்காரத்தில் புறப்பாடு நடைபெறும். 9ஆம் திருநாளான ஏப். 13 புதன்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளலும், திருத்தேர் வடம்பிடித்தலும் தேரோட்டமும் நடைபெறும்.
10ஆம் திருநாளான ஏப். 14 வியாழக்கிழமை பகல் 1 மணிக்கு சித்திரை விசு, தீர்த்தவாரியும், இரவு 8 மணிக்கு ஸ்ரீ பாபநாசர் உலகாம்பிகை தெப்ப உற்சவமும், ஏப். 15 அதிகாலை 1 மணிக்கு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சி கொடுத்தலும் நடைபெறும். காலை 8 மணிக்கு சுவாமி அம்பாள் மரபு மண்டபத்திற்கு அழைத்து வருதல், பகல் 12 மணிக்கு இறைவன் இறைவியர்க்கு குடமுழுக்கு, 1 மணிக்கு அன்னம் பாலிப்பு மாலை 5 மணிக்கு திருமுறை இன்னிசை, இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் உலா வருதல் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.
அம்பாசமுத்திரம் காசிநாதர் கோயில், அகஸ்தியர் கோயில், கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோயில்களிலும் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடைபெற்றது.