இன்று ஏப்6 பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தினத்தையொட்டி, இன்று முதல் 15 நாட்களுக்கு, சமூக நீதி இயக்கம் என்ற பெயரில் பாஜக சார்பில் சிறப்பு பிரசார இயக்கம் நடத்தப்பட உள்ளது. இதை, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்துள்ளார்.

இன்று பா.ஜ.க வின் நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது,
புதன்கிழமை முதல், அடுத்த 15 நாட்களுக்கு சமூக நீதி இயக்கம் என்ற பெயரில் சிறப்பு பிரசார இயக்கம் நடத்தப்படும். இதில், பா.ஜ.க அரசு செயல்படுத்தியுள்ள பல திட்டங்கள் குறித்து எம்.பி.க்கள் மக்களிடையே விளக்க வேண்டும்.
இந்த மக்கள் சேவையில் அனைத்து எம்.பி.,க்களும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அவர் பேசினார்.
கூட்டத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா பேசியதாவது,நாம் ராஜ்யசபாவில் முதல் முறையாக, 100 எம்.பி.,க்களை பெற்றுள்ளோம். வடகிழக்கு மாநிலங்களில் தனியாகவோ அல்லது கூட்டாகவே பா.ஜ.க அரசு அமைந்து உள்ளது. நாகாலாந்தில் முதல் முறையாக பா.ஜ.க வுக்கு பெண் எம்.பி., கிடைத்துள்ளார்.புதன் முதல், அடுத்த 15 நாட்களுக்கு சமூக நீதியை காப்பாற்றும் வகையில், பா.ஜ.க அரசுகள் செய்துள்ள சாதனைகளை மக்களிடையே தெரிவிக்க வேண்டும்.
சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, கொரோனா தடுப்பூசி இயக்கம் என, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையிலும் நாம் மேற்கொண்ட நலத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த இயக்கத்தின்போது, தங்களுடைய தொகுதியில் உள்ள நீர்நிலைகளை துாய்மைப்படுத்துவதிலும் அனைவரும் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ.கபார்லிமென்ட் குழு கூட்டத்தில் பங்கேற்ற, 400 எம்.பி.,க்களுக்கும், இதுபோன்ற காவி நிற தொப்பி வழங்கப்பட்டது. அதில் கட்சியின் பெயரும், சின்னமான தாமரையும் பொறிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், உத்தர பிரதேசம் உட்பட நான்கு மாநிலங்களில் பா.ஜ.க வென்றது. தேர்தல் முடிவுகள் வெளியான பின் குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் காவி நிற தொப்பியை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கூட்டத்தில் அனைவருக்கும் சாக்லேட்
வழங்கப்பட்டது. அதன் உறையில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருந்தது.



