தமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பணிநிரவல் செய்யப்பட்ட 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் சம்பளம் வழங்கப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை ஜன., முதல் – மார்ச் வரை கல்வித்துறை நடத்தியது.
மார்ச் 14ல் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள இரண்டாயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை உள்ள வெவ்வேறு பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யப்பட்டனர்.
இந்தஆசிரியர்களின் முழு விவரம் ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., (ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை)ல் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மார்ச் சம்பளம் கிடைக்காமல் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:
பணிநிரவல் செய்யப்பட்டு 20 நாட்களுக்கும்மேல் ஆன நிலையிலும் விவரம் பதிவேற்றம் செய்வதில் இடர்பாடு உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது.
விப்ரோ நிறுவனம் தான் ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்.,ஐ பராமரிக்கிறது. அடிக்கடி ஏற்படும் ‘சாப்ட்வேர்’ பிரச்னையால் ஒவ்வொரு மாதமும் விவரம் பதிவேற்றுவதில் அரசு அலுவலர்களுக்கு பெரும் சவாலாக உள்ளதால் ஏற்கெனவே மனஉளைச்சலில் உள்ளனர்.
தற்போது 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளமே கிடைக்கவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. இடர்பாடுகளை சரிசெய்து சம்பளம் வழங்க அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.