மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில், சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக தீர்மானம் மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், மொத்த மாணவர்களில் 80%க்கும் அதிகமான மாணவர்கள் மாநில பாடத் திட்டத்தில் பயில்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை பிரிவினரை சேர்ந்தவர்கள். சியுஇடி நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறையும். சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண்களை கணக்கிடாமல் நுழைவுத் தேர்வு மார்க்கை கணக்கில் கொள்வது ஏற்புடையதல்ல.நுழைவுத் தேர்வால் பள்ளிக்கல்விமுறையை ஓரம்கட்டி விட்டு பயிற்சி மையங்களை நாட வேண்டிய நிலை ஏற்படும்.பயிற்சி மையங்கள் புற்றீசல் போல வளர மட்டுமே நுழைவுத் தேர்வு சாதகமாக அமையும். சியுஇடி நுழைவுத் தேர்வு முறையும் நீட் தேர்வைப் போன்று பள்ளி கல்லூரிகளில் மாணவர்களின் கற்றல் திறனை வெகுவாக குறைகிறது. நுழைவுத் தேர்வு, பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு சம வாய்ப்பை வழங்காது மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத் தேர்வு வைப்பதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், என்றார்.
இந்த தீர்மானத்துக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். இதுகுறித்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ. கே.பி. அன்பழகன், நுழைவுத் தேர்வால் ஏழை எளிய மாணவர்கள் பாதிப்படைவார்கள். மேலும் வரும் காலங்களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகிவிடும் என்பதால் நுழைவுத் தேர்வு அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நுழைவுத் தேர்வை கைவிட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. எனவே, மத்திய பல்கலைகழக நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது என்று கூறினார்.
இதுகுறித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், மத்தியப் பல்கலைகழகங்களில் வேண்டுமென்றால் நுழைவுத் தேர்வுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று உள்ளது. எனவே, மத்திய பல்கலைகழக நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏக்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜக தவிர பிற கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஒருமனதாக இந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.





