தொடர் கோடை மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகளவில் விழுகிறது.
ஞாயிறு மாலை முதல் இப்போது வரை, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதிகளான தென்காசி, குற்றாலம், செங்கோட்டை போன்ற இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகவரத்து ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இடி மின்னலுடன் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக நீண்ட நாள்களுக்குப் பிறகு குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக, கோடை காரணமாக அனைத்து அருவிகளும் வறண்ட நிலையிலேயே இருந்தன. இப்போது மழை காரணமாக அனைத்து அருவிகளும் நீரால் நிறைந்து இருக்கிறது. பழைய குற்றால அருவியின் படிகளிலும்கூட நீர் வழிந்தோடுவதை காணமுடிகிறது. அந்தளவுக்கு தண்ணீர் அதிகளவில் வரத்து ஏற்பட்டுள்ளது.




