பல்லடத்தில் பள்ளி மாணவர்களின் சாக்லேட் ஆசையைத் தூண்டும் விதமாக சிரஞ்ச் வடிவிலான சாக்லேட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களைக் கவரும் வகையிலானத் திண்பண்டங்கள் திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படுவது அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாகப் புதிய வரவாக தற்போது ஊசி வடிவிலான சிரிஞ்சிச் சாக்லேட்கள் கடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதில், ஊசியுடன் பயன்படுத்தும் ‘சிரிஞ்சு’க்குள் சாக்லேட் அடைக்கப்பட்டுள்ளது. அதை ஊசி போடுவது போன்று அழுத்தியதும், சாக்லேட் வெளியே வரும். கவர்ச்சிகரமாக இருப்பதால் மாணவர்களும் அவற்றை ஆர்வமுடன் விரும்பி வாங்கி உண்கின்றனர்.
இவற்றில் தயாரிப்பு, காலாவதித் தேதி, முகவரி உள்ளிட்ட எதுவும் கிடையாது. இதுபோன்ற, சாக்லேட்டுகளை, லாபம் கருதி வியாபாரிகளும் விற்கின்றனர். இதனால், மாணவர்களுக்கு பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு இதுபோன்ற தின்பண்டங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே தூங்கிக்கிடக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை இனியாவது விழித்துக்கொள்ளுமா? என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோளாக உள்ளது..