இந்தியாவில் பிரசித்தி பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்றான உலகப்புகழ் பெற்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் சித்திரைத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், 108 வைனவ திருத்தலங்களில் முதன்மையானதுமாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோரும் சித்திரைத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டு சித்திரைத்திருவிழா இன்று அதிகாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இன்றிலிருந்து 10 நாட்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டமானது வரும் ஏப் 29 ல் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் கோவில் வளாகத்திற்குள்ளேயே எளிய முறையில் நடைபெற்றது.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தேரோட்டத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.






