திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்
பெரம்பலூர் அருகில்
இன்று சென்ற கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலியானர்.இருவர் பலத்த காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (45). இவர் திண்டுக்கல்லில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி லதா (40). இவர்கள் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.
லதாவின் தாய் வேம்பு (65), அண்ணன் திருவாரூரில் வசித்து வரும் ராமச்சந்திரன் (44), கமலக்கண்ணனின் சித்தியான கோவையை சேர்ந்த மணிமேகலை (65) ஆகியோருடன் இன்று அதிகாலை 2 மணியளவில் திண்டுக்கல்லில் இருந்து காரில் சென்னை புறப்பட்டனர்.
அங்கு மற்றொரு உறவினரை அழைத்துக்கொண்டு சாய்பாபா கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். காரை கமலக்கண்ணன் ஓட்டினார். இந்த நிலையில் அவர்கள் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரம், நாரணமங்கலம் இடையே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனால் காரில் இருந்தவர்கள் அலறினர். இதையடுத்து யாரும் எதிர்பாராத வகையில் கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து உருண்டது.
இந்த விபத்தில் காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்தனர். இதனை பார்த்த அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் அவர்கள் மீட்க முயன்றனர். மேலும் இதுபற்றி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
இதில் காரை ஓட்டி வந்த கமலக்கண்ணன், அவரது மனைவி லதா மற்றும் லதாவின் தாய் வேம்பு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய ராமச்சந்திரன், மணிமேகலை ஆகியோர் மீட்கப்பட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிகாலை நேரமாக இருந்ததால் டிரைவரின் கண் அயர்ந்து தூங்கியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவிலுக்கு சென்றவர்கள் விபத்தில் பலியானது அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






