மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய அரசு தற்போது 1.1.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி மத்திய அரசு 31.3.2022 அன்றே அறிவித்துவிட்டது.
இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு 24 நாட்கள் கடந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டுமென்று ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அகவிலைப்படிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து எந்த அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை.
இந்த விஷயத்தில் அரசு மவுனமாக இருப்பதைப் பார்க்கும்போது, சென்ற முறை ஆறு மாதம் காலந்தாழ்த்தியதைப் போல் இந்த முறையும் அரசு தாமதப்படுத்துமோ என்ற சந்தேகம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது.
கொரோனா தொற்று ஓரளவு குறைந்து, அரசின் வருமானமும் அதிகரித்துள்ள நிலையில், 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்புவித்து பணமாக்கும் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ளது போல், அகவிலைப்படி உயர்வையாவது 1.1.2022 முதல் 34 விழுக்காடாக உயர்த்தி, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்தி நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 1.1.2022 முதல் 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.