செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
செவ்வாய் கிரகம் திடீரென எதிர்பார்க்காத அளவிற்கு இப்படி குலுங்கியது ஆராய்ச்சியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செவ்வாய் கிரகம் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை நாசா மேற்கொண்டு வருகிறது. இதற்கான மார்ஸ் ரோவர்கள், லேண்டர்கள், ஆர்பிட்டர்களை நாசா பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கருவிகள் ஒவ்வொன்றும் செவ்வாய் கிரகத்தில் ஒவ்வொரு விதமான ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில்தான் செவ்வாய் கிரகத்தில் இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் InSight என்ற நாசாவின் லேண்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த InSight லேண்டர் செவ்வாய் கிரகத்தின் உட்பகுதியில், அதன் ஆழத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை சோதனை செய்யும் கருவி ஆகும்.
இதில் செசீமிக் மீட்டர் ஒன்று உள்ளது. இந்த மீட்டர் மூலம் செவ்வாய் கிரகத்தில் பல்வேறு அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் கண்டுபிடிக்கப்படும்.
செவ்வாய் கிரகத்தின் அடுக்குகள் நகருகிறதா என்றும் இந்த சோதனையில் ஆய்வுகள் செய்யப்படும். முக்கியமாக செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் ஏற்படுகிறதா என்றும் இந்த InSight லேண்டர் ஆய்வுகளை மேற்கொள்ளும்.
அந்த வகையில்தான் தற்போது InSight மூலம் செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் 4.2 ரிக்டர் அதன்பின்னர் 4.1 ரிக்டர் அளவில் அங்கு பெரிய இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகம் முழுக்க பல இடங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுதான் என்று கூறப்படுகிறது.
இதற்கு முன் அங்கு ஏற்பட்ட மார்ஸ் நிலநடுக்கங்களை விட இது 5 மடங்கு அதிக ஆற்றல் கொண்டது. அதிக சக்தி வாய்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அதோடு இது மிக நீண்ட நேரம் ஏற்பட்டதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இதற்கு முன் செவ்வாய் கிரகத்தில் இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதே இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் இருக்கும் canyon நெட்வொர்க் எனப்படும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது நிலவில் இருக்கும் உயர்ந்த மலைகள் இருக்கும் பகுதிகள் ஆகும்.
இங்கு அதிக நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே நாசா விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்த நிலையில்தான் தற்போது அங்கு பெரிய நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
இங்கு முதல் நிலநடுக்கத்திற்கும் இரண்டாவது நிலநடுக்கத்திற்கும் இடையில் 24 நாட்கள் மட்டுமே வேறுபாடு. பூமியை பொறுத்தவரை 4.2 ரிக்டர் என்பது சிறிய நிலநடுக்கமாக இருக்கலாம்.
ஆனால் செவ்வாய் கிரகத்தில் இது மிக பெரிய நிலநடுக்கம் ஆகும். அதிலும் அங்கு முதல் நிலநடுக்கம் 94 நிமிடங்கள் நீடித்து உள்ளது. ஒன்றரை மணி நேரம் செவ்வாய் கிரகம் குலுங்கி உள்ளது. இதற்கான காரணங்கள் என்ன? ஏன் இப்படி ஏற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.