தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இத்தேர்தலில் மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர், பிளஸ் டூ பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர்.
இது தவிர தனித்தேர்வர்கள் 28,353 பேரும், மாற்றுத்திறனாளிகள் 3,638 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும், சிறைக்கைதிகள் 73 பேரும் எழுதுகின்றனர்.இதற்காக தமிழகம் முழுவதும் 3,119 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இன்று காலை 9மணிக்கு மேல் மாணவர்கள் தேர்வு எழுதும் பகுதியில் அனுமதிக்கப்பட்டு மாணவர்களுக்கு கால் டிக்கெட் வழங்கப்பட்டு 10மணிக்கு தேர்வு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் துவங்கியது
முதலாம் நாளான இன்று தமிழ் பரீட்சை நடந்தது. மாணவ-மாணவிகள் 9.30 மணிக்கே தேர்வு கூடங்களுக்கு வந்தனர். தேர்வை பதட்டம் இல்லா–மல், மகிழ்ச்சியாக எழுத வேண்டும் என்று மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கியதின் பேரில் உற்சாகமாக தேர்வு எழுதினார்கள்.
9.45 மணிக்குள் தேர்வு கூடங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதால் அதற்கு முன்னதாகவே வந்து அமர்ந்தனர். ஒரு பெஞ்சிற்கு 2 பேர் வீதம் இடைவெளி விட்டு வழக்கமான நடைமுறையில் தேர்வு நடைபெற்றது.
10 மணிக்கு வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டன. வினாத்தாளை படிப்பதற்கு 10 நிமிடங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 10.15 மணியில் இருந்து பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு பொதுத்தேர்வு இந்த ஆண்டு முழுமையாக நடைபெறுகிறது.
ஆள்மாறாட்டம், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.
பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் தடையில்லா மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் தேர்வுகள் கண்காணிக்கப்பட்டன.
வினாத்தாள்கள் காப்பு மையங்களில் இருந்து பாதுகாப்பாக பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாக கசிந்து விடக்கூடாது என்பதில் கல்வித்துறை மிகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு வந்த பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்வு இதுவாகும். தேர்வின் முடிவுகள், ஜூலைக்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
என தேர்வு மையங்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு எழுதுவதை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.







