பாரம்பரிய நடைமுறை பட்டின பிரவேசத்திற்கு தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளதாக
தருமபுரம் ஆதீனம் இன்று மயிலாடுதுறை அருகே செய்தியாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு சில நாட்களுக்கு முன் மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தடையை நீக்கும்படி அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பட்டினப் பிரவேசத்தை கண்டிப்பாக நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் உள்ளிட்ட மத குருமார்களும், பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோரும் தெரிவித்தனர். இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமுகமான முடிவு எடுப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்த நிலையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து, தி.மு.க. ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தனர். மேலும், தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான உக்தவேதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் 233 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு சாதனையில் நேற்றைய நாள் மீண்டும் இந்த பட்டினப் பிரவேச விழாவை நடத்தலாம் என்று முதல்வர் வாய்மொழியாக தெரிவித்துள்ளார் . அவர்களுக்கு நமது நல்லாசிகள். இந்த விழாவை தொடர்ந்து நடத்தப்படும் என்ற நிலையில் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் முயற்சித்திருக்கிறார். அவர்களுக்கும், அறநிலைத்துறை ஆணையர், செயலர் அனைவருக்கும் எல்லா நலன்களும் வளங்களும் வாழ்த்துகின்றோம். மரபுவழிபட்ட இதுபோன்ற சம்பிரதாயங்களில் அரசு தன்னுடைய நிலைப்பாட்டை அவர்கள் என்றைக்குமே மாறுபாடில்லாத வகையில் இருந்தது என்பதே இதன் மூலமாக நிருபித்து காட்டியிருக்கிறார்கள்.
தமிழ் வழியிலேயே இருந்து அவர்களுடைய முன்னோர்கள் எந்த அளவிற்கு ஆட்சி பீடத்தை நடத்தி கொண்டு அதே வகையிலேயே முதல்வர் ஸ்டாலின் இதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய நாள் இரவு பட்டின பிரவேசம் சம்பிரதாயப்படி நடைபெறும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். அவர்களுக்கு எங்கள் நல்லாசிகள் என்று தெரிவித்தார். ஆன்மீக மறுப்பாளர்கள் அவர்கள் கொள்கையில் அவர்கள் இருப்பது போன்று எங்கள் கொள்கையில் நாங்கள் இருந்து வருகிறோம், மனிதாபிமான அடிப்படையில் தோளில் சுமப்பது விமர்சிக்கப்படுகிறது இருந்தபோதிலும் அவரவர் சொந்த விருப்பத்தின் பேரிலேயே சுமக்கின்றனர்.இறைவன் கொடுத்த தவத்தினால் கிடைப்பது இந்த பல்லக்கு. இதனை எளிமையாக நினைக்கின்றனர்.
தவம் உடையவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும் என அபிராமிபட்டர் தெரிவித்துள்ளார். பட்டினப் பிரவேசம் நிகழ்வு முந்தைய ஆதினங்கள் நிறுத்தாமல் செய்ததை தாங்கள் தொன்றுதொட்டு தற்போதும் செய்து வருகிறோம் என்றார்.







