தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,85,053 மாணவ, மாணவிகள் 11- ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்கின்றனர். வரும் 31-ம் தேதி நிறைவடையும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியிடப்பட உள்ளன.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் இன்று பிளஸ் 1 தேர்வு தொடங்கியது. தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 69 ஆயிரம் மாணவ, மாணவியர் இந்த பொது தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 917 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 42 ஆயிரத்து 989 பேர் மாணவியர். மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் இயங்கும் பள்ளிகளில் இருந்து 15ஆயிரத்து 145 மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தவிர பிளஸ் 1 தேர்வை தனித் தேர்வர்களாக எழுத 5 ஆயிரத்து 673 மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 5 ஆயிரத்து 299 பேரும், சிறைவாசிகள் 99 பேரும் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர்.
முதல் நாளான இன்று மொழிப்பாடத் தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தேர்வுதொடங்கியது. தேர்வு தொடங்கும்போது வழக்கம் போல் 15 நிமிடங்கள் விடைத்தாள் குறிப்பு எழுதவும், கேள்வித்தாள் படித்துப் பார்க்கவும் ஒதுக்கப்படுகிறது. 10.15 மணிக்கு விடை எழுத தொடங்க வேண்டும். மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிகிறது.
பள்ளி மாணவர்களுக்காக 3,119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களுக்காக 115 தேர்வு மையங்களும், சிறைத் தேர்வு மையங்கள் 9 அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1 தேர்வு அறை கண்காணிப்பு பணியில் 47,315 ஆசிரியர்களும், 3,050 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.